Saturday, February 16, 2013

பொருட்கள் மதிப்பு வாழ்வு - 1

தனிமனிதன் தன்னுடைய இருப்பின் சாராமையை (independence) தனித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சமூகத்தின் நிலையான அதிகாரங்கள், வரலாற்று பாரம்பரியம், புறக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் தொழில்நுட்பங்களுக்கு எதிரான முயற்சிகளில் இருந்துதான் நவீன வாழ்க்கையின் ஆழமான பிரச்சனைகள் வழிகின்றன என்கிறார் சிம்மெல்.  ஆதிமனிதன் தன்னுடைய மெய் இருப்பிற்காக இயற்கையோடு நிகழ்த்திய போராட்டங்களின் நவீன வடிவத்தை இவ்வெதிர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாகவே அரசியல், மதம், அறம், பொருளாதாரம் இவற்றோடு உருவாகிவிட்ட பிணைப்பிலிருந்து சுதந்திரத்திற்கான, மனிதனர்கள் அனைவரிலும் சமமாக இருந்த அசல் இயல்பான மதிப்பீடுகள் தடையின்றி முன்னேறுவதற்காக 18ம் நூற்றாண்டு அழைப்பு விடுத்திருக்க; 19ம் நூற்றாண்டு, மனிதனின் சுதந்திரத்திற்கு கூடுதலாக அவனை தனிச்சிறப்பு (unique) மிக்கவனாக, இன்றியமையாதவனாக ஆக்கும் அவனுடைய தனித்துவம் (வேலைப் பங்கீடோடு தொடர்புடையது) மற்றும் அவனுடைய சாதனைகளோடு ஆனால் அதே சமயம் மற்றவர்களின் பதில் நடவடிக்கைகளோடு மேலும் சார்ந்திருத்தலை வளர்த்தது.

மனிதர்கள் பொருட்களை உண்டாக்கி மதிப்பை (value) தோற்றுவித்து பிறகு அவற்றிடமிருந்து ஒரு தள்ளியிருத்தலை உருவாக்கி பின்பு அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்கின்றனர். அருகிலிருக்கும் பொருட்களும், அடைவதற்கு மிக தூரத்திலிருக்கும் பொருட்களும் மதிப்பிருப்பதாக கருதப்படுவதில்லை.  பற்றாக்குறை, நேரம், தியாகம் மற்றும் அவற்றை அடைவதற்கான நெருக்கடிகளும் மதிப்பை உருவாக்கும் கூடுதல் காரணங்கள்.

நகர வாழ்க்கை வேலைப் பங்கீட்டிற்கும் நிதிமயப்படுத்தலுக்கும் வழி வகுக்கிறது.  நிதிசார் பரிவர்த்தனைகள் அதிகமாக ஒரு தனிமனிதன் என்பவன் யார்? என்பதிலுருந்து அவனால் என்ன செய்ய முடியும்? என்பதாக மாற்றம் நிகழ்கிறது.  (சிம்மெல்)

அறிவொளிக்கால, ரொமாண்டிசிச, நவீனத்துவ பின்நவீனத்துவ காலம் வரைக்குமான சித்திரங்களை சிம்மெலின் இவ்வாக்கியங்கள் வழங்குகின்றன.

நவீனத்துவ காலம் பொருட்களின் மறு உருவாக்கத்தின் வழியாக அடையாளப் படுத்தப்பட்டதென்றால் பின் நவீனத்துவ காலத்தில் அப்படி மறு உருவாக்கப் பெற்ற பொருட்களின் பெருக்கத்தை அதன் மதிப்பை குறுகிய காலத்தில் துய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக உள்ளது.
இக்காலத்தில் நவீனத்துவத்தின் என்ன? எது? என்பதை அனைத்தும் மற்றும் எத்தனையாக? மாற்றியிருக்கிறது.

பொருட்களின் நீண்ட கால வாழ்வு  மதிப்பு மிக்கதாக இருந்தது போய் குறுகிய கால இருப்பே அதன் மதிப்பை கூட்டுவதாக உள்ளது.  காலத்தின் வேகத்தை இந்த குறுகிய காலமே தாக்குப் பிடிக்கும் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம்.   ஒளி அளவு வேகத்தின் மூலம் காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற ஐன்ஸ்டீனிய விதிக்கு எதிராக இருக்கும் நீண்ட காலத்தை இந்தத் துய்ப்பின் வழியாக குறிகிய ஒன்றாக மாற்றும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  பெருக்கம் நிறைவை அளிப்பதற்கு பதிலாக அனைத்தையும் அன்லிமிடெடாக வழங்கி நிறைவை எடுத்துக் கொள்கிறது. அனைத்துப் பொருட்களின் மீதும் எவ்வித மதிப்புமின்றியே துய்க்கிறோம். அதன் மதிப்பும் தனித்துவத்தை அலங்கரிப்பதற்காகவே வழங்கிக் கொள்கிறோம்.

பொருட்களின் வழியாக மதிப்புமிக்கதகாக உருவாக்கப்பட்ட நவீன வாழ்க்கை அப்பொருட்களின் வழியாகவே மதிப்பற்றதாக மாறிவிட்டது.  இந்தியா போன்ற சமூகங்களில் நவீன பொருட்கள் சார் வாழ்க்கையின் மீதான ஏக்கமும் நகரங்களில் பொருட்களின் மீதான நிறைவின்மையையும் ஒருங்கே நிலவுகின்றன.  இந்நிலையில் ஒரு கேள்வி மட்டுமே முன்னிற்கிறது.  நாம் யாராக இருக்கிறோம்? என்பது போய் நாம் எங்கே இருக்கிறோம்? என்பதே அது.

ஒரு பெருநகரத்தில் வாழும் மனிதனும் கிராமத்தில் வாழும் மனிதனும், மனிதன் என்னும் அளவில் கூட இப்போது சமமாக எண்ணப்படுவானா என்பது சந்தேகம்.  செழிப்பும், செழிப்பு மிக்க இடங்களில் வாழ்தலுமே மதிப்பை உருவாக்கி மனிதன் என்பதற்கான அர்த்தத்தை அளிக்கின்றன.

நவீனத்துவம் உருவாக்கிய தனிச்சிறப்புமிக்க (unique) அடையாளம் காலாவதியாகி கூட்டுத்தனிச்சிறப்பு (collective uniqueness) உதா, அபார்ட்மெண்ட் வாசம், Gated Community living, தொழில்சார்ந்து  (profession) உருவாகும் தோழமையுணர்வு போன்றவற்றால் தனிமனித புற அடையாளங்கள் வழியாக அன்றி கூட்டு அடையாளங்களை தனிமனிதன் எய்துவதால் அவனது தனிச்சிறப்பு கட்டமைக்கப்படுகிறது.

Thursday, February 14, 2013

அமெரிக்க கனவு


Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி  இல்லை.

இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:

1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு
2. Wikileaksல் வெளியான அமெரிக்க தகவல் இரகசியங்கள்
3. அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார மந்த நிலை

இதன் மூலம் சோவியத் ரஷ்யாவிற்குப்  பின் உலகை ஒற்றைக் குடைக்குக் கீழ் கொண்டுவரும் அமெரிக்க கனவு பெரும் பின்னடைவை சந்தித்தது.  ஆனாலும் இன்றும் அமெரிக்காவும் அதன் நகரங்களின் பெயர்களும் அந்நாட்டிற்கான விசாவும் இந்தியா போன்ற நாடுகளில் ஈர்ப்பு மிக்கதாக இருக்கக் காரணம் இந்நாடுகள் அமெரிக்காவை நகல் செய்து அதற்கொரு அசல்தன்மையை(Originality) உருவாக்குகின்றன.  அமெரிக்க வழிதான் செழிப்பிற்கான பாதை என்கிற தோற்றத்தை இந்த நகலாக்கம் ஒரு நம்பிக்கையாக மாற்றிவிட்டது.

ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளின் சமூக ஜனநாயக கொள்கைகளின் மாதிரிகளைக் கூட பின்பற்ற முயலாத வண்ணம் ஐரோப்பிய அரசுகளே அவற்றைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவம் 3.0 இந்தியா மற்றும் சீனாவில் நம்பிக்கையையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிர்வையும் உருவாக்கி இன்று வரையிலும் மீட்பின்றி சந்தையெனும் கர்த்தாவின் இன்னொரு அதிசயத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவம் 3.0 முக்கிய குணாம்சங்களில் ஒன்றான நிச்சயமற்ற நிலைமை  தனிமனித வாழ்வு மட்டுமின்றி, பொருட்களின் வாழ்வு மற்றும் நிறுவனங்களின் வாழ்வையுமே அன்றாட சவாலாக மாற்றியது.  இம்மூன்றின் பெருக்க வடிவமான நாடுகளின் அரசுகள் கூட இந்நிலைமைக்கு எதிர்வினையாக குடிமக்களின், சுற்றுச் சூழலின் அடிப்படை கட்டமைப்புகளைக் குலைத்து வெளிப்படுத்துகின்றன.  மத்திய தர வர்க்கத்தின் பொருளீட்டு சக்தியை அதன் சொத்து மதிப்புகளை உயர்த்துவதற்கான விதிகளைத் தவிர  எதன் பொருட்டும் சிந்திக்கத் தயராகாத மூளையாக, நலத்திட்டங்களை ஒரு சுமையாகவும் அத்திட்டங்களால் பயன் பெறும் குடிமக்கள் தொகுதியினை முன்னேற்றத்திற்கு தடையாகவும் கட்டமைக்கின்றன.

இந்தியா எப்போதுமே நெருக்கடியில் வாழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பல தேசங்கள், வர்க்கங்கள் உண்டு. ஆகையால் அமெரிக்காவை நகல் செய்யும் இந்தியாவின் நெருக்கடிக்கு ஏனைய இந்தியா கொடுக்கும் விலை மிக அதிகம்.

பூர்வ குடிகளை ஒழித்து ஐரோப்பிய உபரிகள் ஒரு அமெரிக்காவை உருவாக்கினர் என்றால் இந்தியா அதன் பூர்வ குடிகளையே (பழங்குடிகள், வறிய தொழிலாளர்கள், விவசாயிகள்) ஒழித்து உருவாக்கும் அமெரிக்க நகல் அதன் குறியீட்டு வீழ்ச்சிக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.