Saturday, December 29, 2012

பாதரசம் வெளியீடாக வரவிருக்கும் சிறுகதை தொகுப்பான “கனவு மிருகம்” முன்னுரை :



                                                          

     பொய் சொல்வதில் இருந்துதான் கதை சொல்வதும் வந்திருக்க வேண்டும்.  கதைகளும் பொய் சொல்வதே போன்று உண்மையைச் சொல்வதாய் அமைவதால் புனைவென்கிறோம்.  உண்மையைப் புனைதல். உண்மை என்பதே கூட இல்லாமலும், சார்புடையதாகவும், பல உண்மைகளாகவும் இருக்கும் பட்சத்தில் புனைவுகளும் பலவாறாக உள்ளன.

     நேர்ச் சந்திப்புகளில் சுந்தர ராமசாமி எழுத்தாளனாக வேண்டுமென்பது ஒரு Passion எனவும், நாஞ்சில் நாடன் “என்னிடமும் சொல்வதற்கு கதைகள் உண்டு என நம்பவேண்டும்” என்றனர்.  கதைகள்தான் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கத் தூண்டியவை. மேலும் சிலர். பலவாறான விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் புனைவும் உரைநடையும் மொழியின் வழி சில சாத்தியங்களை செய்துபார்ப்பதே. அது கவிதை போல் மொழியின் சாத்தியமாக இன்றி மொழியை ஒரு கருவியாகக் கொண்டு வேறொன்றைச் சாத்தியமாக்குவது.  புனைவு மொழியிடமிருந்து கடன் பெறுகிறது. இப்படிக் கொண்டால் புனைவிற்கு மொழி இரண்டாம் பட்சம்தான். கவிதையும் மொழியும் இணைவதைப் போல புனைவில் ஒரு இணைவு உண்டாக வேண்டியதில்லை.  வெறும் மொழியால் கதைகளை உருவாக்க முடிவதில்லை. அதன் உதவிகொண்டு சிலதைப் புனைய வேண்டியுள்ளது.

     இலக்கியம் என்ற ஒன்று தோன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து அதன் வடிவம் சார்ந்து நிகழ்ந்த மாற்றங்களே நம்மிடம் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் நிலைத்திருக்கின்றன. நாவல்கள் எழுதப்பட்ட பின்புதான் சிறுகதைகள் தோன்றின.  விரிவான ஒரு வடிவத்தை முயன்ற பிறகு பரப்பில் சிறியதான கதைகள் வழி ஒரு சிமிழுக்குள் வெய்யிலை அடைப்பது போன்ற முயற்சியாக சிறுகதைகள் நம்மிடம் உலவுகின்றன. 

கதைகள் சொல்லப்பட ஆரம்பித்த போதிலிருந்தே யதார்த்தமாக இல்லை.  யதார்த்தம் என்பதுதான் கதை சொல்லலில் கடைசியில் வந்தது. யதார்த்தத்திலிருந்து விடுபடவே பல்வேறு எழுத்து முறைகள் குறிப்பிடத்தக்க வகைமைகளில் வடிவங்களில் எழுதப்பட்டன. அவை பழைய கதை சொல்லல் முறையை மீளுருவாக்கம் செய்து “ஆயிரத்தோரு இரவுகள்” சொன்னவர்களோடு, அமரந்தாவை விண்ணேகவிட்டவர்களுக்கு தொடர்ச்சியை நிறுவ முடிந்தது. ரேசன் கடையில் வரிசையில் மனிதர்கள் நின்றால் யதார்த்தவாதக் கதை.  அதே வரிசையில் பாட்டரிகள் நிரப்ப ரோபோக்கள் நின்றால் அறிவியல் புனைவு.  மீதி அந்த ரோபோட்டுகள் செய்வதும், மனிதர்கள் செய்வதும் ஃபான்டஸி மட்டுமே பிள்ளைகள் பெற்றுக் கொள்வது உட்பட.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் தேவைக்கும் அதிகமான காலம் வெளிவராமல் இருந்தவை. ”கனவு மிருகம்” எனும் கதை மிகச் சிறியது என்றாலும் இரண்டு வருடங்களாக மாற்றங்களுக்கு உட்பட்டு ஒருவழியாக கோணங்கியின் ”கல்குதிரை”யில் பிரசுரம் கண்டது.   பிரசுரமான முதல் கதை “ஆப்பிள்” விகடனில் வெளிவந்த ஆண்டு 2007.  இந்த ஐந்து வருடங்களில் மொத்தம் 7 கதைகள் மாத்திரமே அச்சைப் பார்த்தன.  ”கழிப்பறைக் குறிப்புகள்” எனும் பிரசுரமான சிறுகதையை இத்தொகுப்பில் சேர்க்கவில்லை.  மற்ற கதைகளோடு ஒப்பிடும் போது அது விளையாட்டுத்தனமாக எழுதப்பட்ட கதையாகப் படுவதாலும், அந்தக் கதை ஒருவேளை மற்ற கதைகளின் போக்கோடு ஒட்டாமல் தீவிரம் குறைந்து காணப்படும் என்பதாலும் அதைக் கைவிடவே விரும்புகிறேன். 

சோம்பல்தான் எழுதாமல் இருப்பதற்கு முதலும் அடிப்படையான காரணமாக இருந்தாலும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கதைகளைத் தாண்டி புதிதாகச் சொல்வதற்கு எழத முனைபவை அனைத்துமே தகுதியானவை ஆகிவிடுமா என்கிற சந்தேகமும் கூட.  முடிக்காமல் விடப்பட்ட கதைகளும், முழுக்க எழுதி “மறுசுழற்சி”க் கூடையிலிருந்தும் காணாமல் போய்விட்ட கதைகளும் உண்டு.  அவை கருக்கலைய சரியாக வராதது குறித்த சந்தேகமே பெரிதும் காரணம்.

இத்தருணத்தில் ”புதுவிசை” ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா, கோணங்கி, பா. வெங்கடேசன், ஆசிரியர் ஜெகந்நாதன், நண்பர் குணா ஆகியோருக்கு கதைகளின் பொருட்டும்,  யதேச்சையான சந்திப்பின் மூலம் எவ்வித வற்புறுத்தல்களும், சிபாரிசுகளும் இல்லாமல் மிக உவப்பான முறையில் இக்கதைகள் தொகுப்பாக வெளிவரக் காரணமான நண்பர் சரவணனுக்கும் நன்றி. 

Monday, December 10, 2012

நள்ளிரவுக் கோரிக்கை - 17


தெருநாய்களைக் கொல்லவே விரும்புகிறேன்
அப்படியே அந்தப் பிச்சைக்காரர்களையும்
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அரசு ஆஸ்பத்திரி வாசலில்
குறிதெரிய படுத்திருக்கும் நோயாளிகளையும்
இயேசு விபாச்சாரியைத் தொட்டான் மாண்டவனை உயிர்ப்பித்தான்
தொழுநோயாளியை குணப்படுத்தினான்
இந்நகரம் ஒரு முழுநேர இயேசுவை எதிர்பார்த்து நிற்கிறது
குப்பைகளும் தூசியும் இல்லாத வீதிகளில்
குறிப்பாக முதல்வர் வசிக்கும் தெருவைப் போலவோ
ராஜ்பவன் முன்பிருக்கும் சாலையைப் போலவோ
சுத்தமான தெருவில் வசிக்கவே விரும்புவேன்
அங்கே நான் மட்டுமே குப்பையிடுவேன்
நான் மட்டுமே சிறுநீர் கழிப்பேன்
ஊனமுற்றவர்கள் இல்லாத உலகை
அடையாறு ஆற்றில் தோழிகளோடு படகோட்டும் நிலைமையை
நீங்களும் என்னைப்போல விரும்பவே செய்வீர்கள்
ஆனாலும் குப்பைகள் மிதக்கும் நகரத்தில்
மழைத்துளிகள்
பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்ட
காசநோயாளிகளின் நெஞ்சுச்சளியின் மீது விழுகின்றின
அடையாறு புற்றுநோயாளிகள் மருத்துவமனையில்
வாசலில் உணவருந்தும் பார்வையாளர்களின்  வடைகளில்
ஆனந்த பவன்களின் ருசி
கூவம் ஆற்றிற்கு வடக்கேதான் தலைமைச் செயலகம்
அது சாக்கடையைத் தாண்டித்தான் மீதிநிலத்தை ஆளவும் செய்கிறது
இந்தச் சூரியன் அழுக்கைக் காணவே எழுகிறது
அதன் பிரியம் அரசு ஆஸ்பத்திரியின் துர்நாற்றம் மிகுந்த குப்பையில்
வீசப்படும் கலைக்கப்பட்ட கருவாக இருக்கும்
ராபர்ட் கிளைவ் இங்கேதான் திரிந்தான்
பாரதியார் இங்கேதான் பார்த்தசாரதி கோயிலில் உண்டகட்டி வாங்கினான்
புதுமைப்பித்தன் திருநெல்வேலியில் ”இல்லாத”
விலைமாதர்களை மகாமசானத்தில் கண்ட நகரம் இதுதான்
எலெக்ட்ரிக் இரயில்கள் ஓடுகின்றன
இரண்டாம் விமான நிலையத்திற்கு அரசு திட்டமிடுகின்றது
குடிசை மாற்று வாரிய அபார்ட்மெண்டுகளில்
மோட்டர் வைத்து ஏற்றும் நீரில் அமிலம் கலந்திருக்கும்
மான்குட்டிகள் பன்றிகளோடு குப்பைகளை மேயும்
பக்கிம்ஹாம் கால்வாயில் மிதக்கும் மூட்டையின் மீது தூங்கும் ஆமை
மேலே ஓடும் பறக்கும் இரயில்
ஆகக் கேவலமான குடிசையில் வாழ்பவர்க்கும்
ஆக மகா வசீகரமான போட்கிளப் மாளிகைகளில் வாழ்பவர்க்கும்
சமமாக ஓடுகிறது கருணைமிக்க சாக்கடைப் பேராறு
உங்களைப் போலவே
விநாயகர் சதுர்த்தி அன்று அதே சாக்கடையில் சிலைகளைத் தூக்கிப் போடவும்
மீதி நாட்களில் மாதவிலக்குப் பெண்களின் நாப்கின்களைப் போடவும்
பாலங்களில் நின்று சிறுநீர் கழிக்கவும் விரும்புவேன்
மெரினாவில் பெசன்ட்நகரில் கொட்டிவாக்கத்தில்
பின்னரவுகளில் உடல்களைத் தேடியலையும் குடிசைவாசியும்
குளிர்க்கண்ணாடிகள் பதிக்கப்பட்ட கார்களில் அலைபவனும் புகைக்கும் கஞ்சாப் புகையில் இந்நகரம் தள்ளாடுகிறது
வடபழனி ஸ்டூடியோவில் அந்த நடிகை மேக்கப் போடுகிறாள்
அந்த நடிகன் கடமையின் பொருட்டு அவளைத் தழுவத் தயாராகிறான்
வெளிச்சம் வெளிச்சமாய் இரவின் மீது கொட்டுகின்றன விளக்குகள்

Wednesday, December 5, 2012


     நள்ளிரவுக் கோரிக்கை 16

            நீர்மம் இழந்த செவ்வாய்க்கிழமையில்
     டூப்ளிகேட்டுகளின் ராஜா இரண்டாம் முறையாக
     புதியவனாக மாறும் சபதமெடுத்தான்
     ஆலன் சோலி ஸ்டிக்கரை
     விலைகுறைவான காட்டன் காற்சட்டையில்
     தைத்து அலையத் துவங்கியதிலிருந்து துவங்கியது
     ப்ராண்டுகளை டூப்ளிகேட் செய்வது
பூமா காலுயர்த்தும் தொப்பியை
நேபாளத்திலிருந்து கள்ளச்சந்தையில் வந்த சரக்கென
அவன் நண்பன் விற்பதாகச் சொல்ல அதற்கு
காதலியிடம் பணம் வாங்கி அவள் அன்பைச் சோதித்தான்
ரீபோக் சூவில் 0வுக்கு பதிலாக a இருந்ததை
திறமையாக செப்பனிட்டு வடிவம் சிதைந்த 0வாக மாற்றினான்
கிறிஸ்டியானோ ரொனால்டோ முகம் பதிந்த
நைக் டீசர்ட்டில் ”ஸ்வூஷ்” குறி பக்கம் மாறியிருந்தது
சாலையில் நின்றிருந்த இருநபர்இருக்கை ஆடிகாரின் முன்நின்று
எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அவன் அணிந்திருக்கும்
குளிர்கண்ணாடியின் ஏவியோட்டர் வடிவம் வெறும் நூறுரூபாய்
12000 ரூபாய் சம்பளம் உள்ளவர்களுக்கும்
கடனட்டை கிடைக்குமெனத் தெரிந்த ராஜா
மூன்று அட்டைகளை மொத்தம் அதிகபட்ச தொகை அளவு
75000 இருக்கும் வண்ணம் கிடைக்கப் பெற்றான்
அன்றுதான் தன்னை முதன்முறையாக புதியவனாக மாற்றும் சபதமெடுத்தான்
அன்றைக்கே வாங்கியதுதான் ஃபாஸ்ட்டிராக் வாட்சும்
அடிடாஸ் டீ சர்ட்டுகளும் யோனக்ஸ் மணிக்கட்டுப் பட்டைகளும்
கோல்ட் ஜிம்மில் ஆறுமாத சந்தா கட்டிச் சேர்ந்தான்
அதற்காக வாங்கிய சாக்சுகள் அனைத்தும் ஃபிலாவின் Fல் மேல்வரி சிவப்பான ஒரிஜினல்கள்
யுனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டனில் அவனது காதலிக்கு
மேற்சட்டை வாங்கிக் கொடுத்தான்
கூடவே மைக்ரோமாக்ஸ் பிங்க் நிற செல்பேசியும்
அதன்பிறகு அவர்கள் மெய்ன்லாண்ட் சைனா உணவகத்தில்
உணவருந்திய தொகை அவன் சம்பளத்தில் 15%
அவன் காதலி வழக்கமாக கொடுக்கும் முத்தத்திற்கு அதிகமாக
அவனுக்குக் கொடுத்தாள்
முத்தத்தில் ஸ்ச்வான் பிரைட் ரைஸில் இருந்த கிங் பிரான்சின் வாசனை
ஆறு மாதங்கள் அங்குமிங்கும் திரட்டி
கடனட்டை பில்லைக் கட்டிய ராஜா
அதன்பிறகு மூன்று வங்கிக்காரர்களாலும் டிஃபால்டர் என அழைக்கப்பட்டான்
கடைசித் தவணையையும் கட்டிமுடிக்கும் போது
அடிடாஸ் டீசர்ட்டுகள் சாயமிழக்கத்துவங்கியிருந்தன
அவனது காதலி அதன்பிறகு காஃபிடேயின் கழிப்பறையில் வைத்து
வேறொருவனுக்கு கொடுத்த முத்தத்தில்
ஐஸ்கிரிமுடன் வழங்கப்படும் ப்ரெளனியின் வாசனை
இப்போது இரண்டாம் முறையும் புதியவனாகும் சபதமெடுத்த
டூப்ளிகேட்டுகளின் ராஜா
அடுத்தநாள் புதன்கிழமையில்
பற்பசைக்குப் பதிலாக செங்கற்பொடியைத் தேய்த்தான்
வீட்டிலிருந்த கடலைமாவில் முகம் கழுவினான்
மையெடுத்து கண்களைச் சுற்றி குளிர்கண்ணாடிபோல் வரைந்தான்
வெற்று மார்பில் X குறியை சிவப்புநிறத்தில் தீட்டினான்
நிர்வாணமாகத் தெருவில் இறங்கி நடந்தான்

Saturday, December 1, 2012

நள்ளிரவுக் கோரிக்கை 15



தடுமாறத் துவங்கிவிட்ட ஒழுங்கு
ஆண்டிகுவிட்டி ரேரின் அற்புத மஞ்சள் கலந்த பழுப்பு
வீதியெங்கம் பரவ
நினைவின் அடுக்கைக் குடைந்து
ஒரு பெண்ணை எடுக்கிறேன்
சற்று முன் உண்ட
தந்தூரிச் சிக்கனைப் போன்ற
மிதமான பக்குவத்தில் அவள் தேகம்
அவளுக்குப் பெயர் வைக்கிறேன்
அவளுக்கு முன்பே பெயர் இருந்தபோதும்
அவளை இங்கே உலவவிடுகிறேன்
அவள் பாதங்கள் வேறெங்கோ காலடி பதிக்கும்போதும்
அவளை முத்தமிடவும் தழுவவும் முனைகிறேன்
இரவின் மீதல்லவா சோடியம் வேப்பர் ஓவியம் வரைகிறது
இரவின் போதல்லவா வார்த்தைகளுக்கு இறக்கைகள் முளைக்கின்றன
எமினெம்மை ஒலிக்கவிட்டுச் செல்லும் ஸ்கோடா காரின்
நீல நிற வண்ணமும் ஒளியில் கரைகிறது
அந்த வீதி நெடுகச் செல்லும் வீதி
அவன் விதி சுருங்கச் சொன்னால் இன்னுமொரு விதி
காதுகளில் ஒலிக்கட்டுமே முத்தமிடும் உதடுகளின் சொற்கள்
கண்களில் படரட்டுமே கொடியேன நடமாடும் உடல்
ஊதாநிற டீசர்ட் அணிந்த அவள் அறைக்குக் கூட்டிப் போகிறாள்
வார்த்தைகளின்றி தடுமாறத் துவங்கிவிட்டன
காற்றில் இறகென மைதீட்டும் இலைகள்
துவந்தம் அசைவுறத் துவங்கிய கணத்தில்
ஓசைகள் கேட்கின்றன மரங்களின் கிளைகளில்
சற்றே சற்று முன்புதான் எஃஎம் ஒலித்து நின்றது
அறையில் உலவும் ஊதாநிற டீசர்ட் பெண்ணும்
ஜன்னல் வழிப்பரவும் குளிரில் கரைகிறாள்
ஆண்டிகுவிட்டி ரேருக்கு மீண்டுமொரு பெயர் சூட்டுகிறேன்
அதற்கு முன்பே ஒரு பெயர் இருந்தபோதும்
அதன் பழுப்பு நிறத்தை பருகத் தாவுகிறேன்
உறக்கம் உடலை இழுத்துச் செல்லும் ஆழத்தில்
ஊதாநிற டீசர்ட் அணிந்த பெண்
அவளைத் திரவமென மாற்றுகிறாள்
கோப்பையெனத் ததும்பத் தயாராகிவிட்டது இதயம்

Friday, November 23, 2012

அஜ்மல் கஸாப்பும் உருவாக்கப்பட்ட தேசபக்த நீதியுணர்வும்



     அஜ்மல்  கஸாப்  தூக்கிலிடப்பட்டுஎரவாடா  சிறையில்  புதைக்கப்பட்டது  ஒரு குறியீட்டு  நிகழ்வு.    இந்திய  நீதி  அமைப்பு  மற்றும்  தண்டனைச்  சட்டங்கள் தொடர்புடையதாக  இன்றி  இந்திய  அரசியலோடும்,   பொதுமக்கள் மனப்போக்கு, அரசியல் ஆதாயம் ஆகிவற்றைக் கணக்கில்  கொண்டு  எடுக்கப்பட்ட  ஓர்  அரசியல்  நடவடிக்கையே  இந்தத்  தூக்கு. 

பொதுவாக  நீதி  என்பது  குற்றத்தில்  தொடர்புடைய  இரு  தரப்புகளுக்கு இடையில்  சமநிலையை  உருவாக்குவது.    இந்த  சமநிலையின்  மூலம் ர்  இழப்பை, நட்டத்தை  மற்றோர்  இழப்பின்  மூலமும்,   நட்டப்படுத்தவதின்  மூலமும்  ஈடு செய்யப்பட்ட  தோற்றம்  உருவாக்கப்படுகிறது.    இந்த  சமநிலை  நீதியை பாதிக்கப்பட்டோருக்கும்,  தண்டனையை  பாதிப்பை  உருவாக்கிய  தரப்புக்கும் பகிர்ந்தளிக்கிறது. தண்டனைதான் நீதி என்பதற்கு பொருளை உருவாக்குகிறது. தண்டனைதான் நீதியின் நீண்ட பரிபாலன முறைகளுக்கு முடிவாக இருக்கிறது (Punishment is the end of the processes of Justice).  நீதி நிலைநாட்டப்படுவதற்கு விசாரணையின் வழி தண்டனைக்கான நியாயத்தை உருவாக்குதல் தேவை.  நவீன நீதிப் பரிபாலன முறை குற்ற உடல்களைக் கையாளுதல், விசாரித்தல், தண்டனை வழங்குதல் ஆகியவற்றிற்கு தனித்தனி துறைகளை உருவாக்கியது.  குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகளை வழங்கும் நீதித்துறை தன்னை மிகவும் நடுநிலைமையோடும்(Neutral), நாகரிகமிக்கதாகவும்(Civilised), தனது விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பின்பற்றப்படும் ஒழுங்காகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது.  இந்தத் தண்டித்தல் என்பதற்கான பொறுப்பை சிறைத்துறையினருக்கு வழங்கி நீதி முறைமையின் தாழ்ந்த இடத்தில் அத்துறையை வைத்துள்ளது.  அது நாகரிகமற்றதாகவும்(Uncivilsed) இருக்கிறது.  ஏனெனில் அது உடலோடு தொடர்புடையது.  ஆனால் அஜ்மல்  கஸாப்பின் விசயத்தை பொருத்தவரை நீதிமன்றங்களுக்கு வெளியே தண்டிப்பதற்கான விருப்பமும், நியாயமும் உருவாக்கப்பட்டு நீதிமன்றங்கள் சட்ட மொழியில் அவைகளை நிறைவேற்றும் வழிகளை வழங்க மட்டுமே உதவின.  குரலுள்ள சமூகம் எவ்வித விசாரணைக்கும் இடமோ, நேரமோ அளிக்க விரும்பாமல் ஒரு உடனடி தண்டனை நிறைவேற்றலை நீதிமன்றத்தினிடம் வலியுறுத்தியது.

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் உடனடி எதிர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட போதும் கைப்பற்றப்பட்ட ஒரே குற்றவாளியான கஸாப் 4 வருடங்கள் பொதுமக்களின் முன் காட்சிக்கு வைக்கப்பட்டு நீதி, காவல் மற்றும் மருத்துவத் துறையினர் உதவியுடன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.  தோட்டாக்கள் தாமதப்படுத்திய நீதியை கயிறு நிறைவேற்றியதற்கு சமூகம் மகிழ்ந்தது.  இதற்கிடையில் கஸாப்பை “தேசிய விருந்தினர்” என்றும் அவருக்கு வழங்கப்பட்ட கோழிக்கறி உணவை “விருந்துபசரிப்பிற்கு” இணையாகவும் இதே சமூகம் வெறுப்பை வெளிக்காட்டியது.  நான்கு வருடங்களாக அவரது இருப்பு ஒரு உறுத்தலாகவே இச்சமூகத்திற்கு இருந்திருக்கிறது.

இந்த நான்கு வருடங்களில் கஸாப் செய்தியில் அடிபடும் போதெல்லாம் அவர் இன்னும் கொல்லப்படாமல் இருப்பதைக் குறித்த தங்கள் பொறுமையின்மையை ஊடகங்கள் வழி இந்த குரலுள்ள சமூகம் வெளிப்படுத்தியது.

தூக்கு உடலுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும் தண்டனை முறை.  சிறையிலடைத்தல், சொத்துக்களை பறிமுதல் செய்தல், நாடுகடத்தல் போன்ற தண்டனைகள் உடலுடன் தொடர்பில்லாமல் சுதந்திர நடமாட்டம் மற்றும் நலத்தைப் பேணுதலைக் கட்டுப்படுத்துவதின் மூலம் மனதோடு தொடர்புடையதாகவும் ஒரு வகையில் தண்டனை என்பதற்கு பதிலாக சிகிச்சையாகவும் இருக்கிறது.  மெய் இருப்பை (Physical existence) இல்லாமல் ஆக்கும் தண்டனையே உச்சபச்ச வெறுப்பைக் காண்பிக்கப் பயன்படுவதாக இருக்கிறது.  இந்தச் சமூகம் அஜ்மல்  கஸாப்பின் மெய் இருப்பை ரத்து செய்யவே விரும்பியது.  அதன் மூலம் மும்பையில் கொல்லப்பட்டவர்களின் மரணத்திற்கு நீதி செய்யப்பட்டதாகவே எண்ணுகிறது.  அஜ்மல்  கஸாப் ஓர் அந்நியர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர், மக்களின் மீது வரைமுறையற்ற தாக்குதலையும் கொலைகளையும் செய்தவர், இவர் ”ஒடுக்கி வைக்கப்பட்ட” வாழ்க்கை வாழ்வதற்குக் கூட எவ்வித தகுதியும் அற்றவராய் சமூகம் நினைத்தது.  நீதிமன்றங்களின் சட்டங்களும் சமூகத்தின் போக்குகளை பிரதிபலிப்பவையே.

26/11 ஒட்டிய அனைத்து சட்ட, சமூக ரீதியான நடவடிக்கைகளுக்கும் இந்தத் தூக்கு ஒரு முற்றுப் புள்ளி.  இனி சமூகம் 26/11ன்றோடு தொடர்புடைய “தியாகிகளையும்”, உயிரிழந்தவர்களையும் மறந்துவிடும்.  நீதி முழுமை பெற்றபின் அதுவாகவே ஒரு மறதியை சமூகத்தில் உருவாக்கும்.  இனி 26/11 ஒரு துக்க நிகழ்வாக மட்டுமேயின்றி தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாகவும் மாறக்கூடும்.  உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் ஓம்பும் துக்கம் வேறு. அதையை சமூகம் தியாகமாக, தேசபக்தியாக அந்தத் துக்கத்தை மாற்றிவிடும். சீருடையில், நடவடிக்கையின் போது நிகழும் மரணங்கள் அவர்களது வேலை என்பதையும் தாண்டி தேசபக்தியின் வெளிப்பாடாகவும் தோற்றம் பெரும்.

அப்துல் கஸாப்பின் தூக்கு இந்த சமூகத்திற்கு இரு வித நடவடிக்கைப் புள்ளிகளைத் தந்துள்ளது (Action Points).  ஒன்று மும்பைத் தாக்குதலின் போதே கொல்லப்பட்ட ”தீவிரவாதிகள்”.  அவர்கள் யார் என்பதைக் கூட இச்சமூகம் மறந்துவிட்டது. அவர்களுக்கு பதிலாக தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களும், காவல்துறையினரும் இதர படையினரும் நினைவு கூறப்பட்டனர்.  அவர்களது மரணத்திற்கு பழிதீர்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை அஜ்மல்  கஸாப்பின் நான்கு வருடக் காத்திருத்தல் வழங்கியது.   இனி மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஞாபகத்தை அஜ்மல்  கஸாப்பின் மரணம் பின் தள்ளிவிடும். இந்தத் தாமதம் “சுதந்திரப் பொன்விழா” கொண்டாட்டங்கள் போல தேசபக்த அளவையும் அதிகரிக்க உதவியது.

                இந்திய அரசு இதன் மூலம் தனது உறுதியை வெளிப்படுத்தவும், மக்களது தேசபக்த உணர்வை மதிப்பதையும், நேர்மையான நீதி முறைமைகள் பின்பற்றப்பட்டதாக அறியப்படவும் இந்தத் தூக்கு வாய்ப்பளித்துள்ளது. தாமதிக்கப்பட்ட இந்தச் சட்டபூர்வ கொலை அனைத்து வகைகளிலும் அதிகாரவர்க்கத்தினருக்கும், தேசபக்தர்களுக்கும் உடனடி எதிர்நடவடிக்கையில் கொல்லப்படுவதை விடவும் திருப்தியளிக்கக் கூடியது.  மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரே நபர் அஜ்மல்  கஸாப்.

     இந்தத் தூக்கு இன்னொரு வகையில் மிக முக்கியமான குறியீட்டு நிகழ்வாகவும் மாறுகிறது.  இந்திய வரலாறு உருவாக்கிய கூட்டு மனத்தில் இதுவரையிலும் எரவாடா சிறை காந்தியோடு தொடர்புடையதாக இருந்தது. இந்த ஞாபகம் இப்பொழுது வேறொன்றால் பதிலீடு செய்யப்பட்டுவிட்டது. இனி எரவாடா சிறை அஜ்மல்  கஸாப்பின் தூக்கோடு நினைவு கூறப்படும். காந்தியோடு தொடர்புடைய ஞாபகம் அவருக்கு எவ்வகையிலும் ஒப்புதல் இருந்திருக்காத மரணத்தின் மூலம் பதிலீடு செய்யப்பட்ட நகைமுரண் இந்த சமூகம் காந்தியிடம் விலகிவிட்டதற்கு மேலுமொரு உதாரணம்.

     ஒருவேளை எரவாடா சிறையில் காந்தியின் ஆவி உலவக்கூடும்.  இனி ஒருபோதும் அஜ்மல்  கஸாப் புதைக்கப்பட்ட சிறைச்சாலைக்குள் அது நுழையவே போவதில்லை.  அஜ்மல்  கஸாப்ப்பின் தூக்கு காந்தியின் ஆவியை இன்னுமொரு இடத்திலிருந்தும் வெளியேற்றிவிட்டது.



Wednesday, November 21, 2012



பருவம் தப்பி இடம்பெயர்ந்த பறவை
நீரற்ற நிலைகளில் புழுக்களுமில்லாத வெடிப்புகளைக்
கண்டு மலைத்து
விண் அகல் ஒவ்வொன்றிடமும் வேண்டிநின்றது
முதல் மழையின் துளிகள் மீன்களென விழவேண்டி
பருவத்தை எப்போதுமே தவறவிடும்
அவனும் தூண்டிலோடு நிலைகளில் திரிந்தான்
ஒரு நிலையில் பறவையைச் சந்தித்தபோது
திரும்பிப் போகும் தூரத்தின் அயற்சியை தவமென ஆக்கிய முடிவை
எப்போதும் போல அலகு வழி சொன்னது
அவனக்குத்தான் பதில் சொல்ல வழியின்றி வந்தவழி நடந்தான்
பின்னால் வந்த பறவைக்கு புரிந்திருக்க வேண்டும்
ஒன்றும் சொல்லாமல் கொஞ்ச தூரத்தில் திரும்பப் போய்விட்டது

அதன்பிறகும் பெய்த மழைக்குப் பிறகும்
குளங்களில் முளைத்த மீன்களைத்
தவறவிட்ட தூண்டிலோடு திரியும்
அவனது தவப்போதில்
திரும்பப் போவதற்கென தூரங்களை உண்டாக்க
பருவங்களைத் தவறவிடும் முடிவை எடுத்த காலத்தில்
மீன்கள் ஆவியாகி நிலம் பிரிந்தபடியிருந்தன

Thursday, November 15, 2012

நள்ளிரவுக் கோரிக்கை 14



அது ஒரு கோப்பை
நிரம்பவே நிரம்பாத கோப்பை
உடல்தான் அதனுள் ஊற்றவேண்டிய திரவம்
மீதியெல்லாம் வெறும் சடங்கு
அனுதினமும் வெறுமையில் தொய்யும் சடங்கு
பிரார்த்தனைகளுக்கு பலம் இருப்பின்
அது பதிலாகவிருக்கும் உலகிற்கு நரபலி கோரும் வழக்கமுண்டு
நிச்சயமற்ற இரவில் தனிமையில் துடிக்கும் நிலவு
பனித்துளி அகல் விளக்கில் சுடரும் வைரச் சூரியன்
அழகை பதிலாக்கும் வானுக்கு நட்சத்திர பலிகோரும் வழக்கமுண்டு
காணவே முடியாத உலகங்களுக்கு அப்பால்
தன் பின்புறத்தைக் காணச் சுற்றும் கோளம்
சாசுவதம் என்பதே முதுகைக் காண முயன்று ஓயாது சுற்றுதல்
அது ஒரு சர்க்கரை ஜல்லி
எறும்பு தன் உடலில் சுமக்கும் இன்னொரு உடல்
காற்றில் கரைந்து தித்திப்பென மலர்களில் தங்கும்
காற்றின் மடியில் பயணம் செய்யும் மகரந்த துகள்களின் பாதைகள்
உடலற்றதின் ரேகைகள்
அனைத்துலகை ஆள்பவர்களும் நடக்கும் உடலின் பாதை
எலும்புக் குகைகளின் சாந்தை நீக்க வெற்றிடம் வழி
வெளியேறும் காற்றில் கலக்கும் மாமிசவாடையில்
பூக்கள் வண்டுகளை சூழ்கொள்ளும்
வைரக்கற்கள் புதையுண்ட மடிகளைக் குடையும்
இன்னொரு உடலின் இயந்திர விரல்கள்
கிதாரின் தந்திகளை மீட்டு மின்னொளியை மகிழ்ந்தெழச்செய்யும்
இசையும் ஓர் உடல்
நீதி செய்வதே இன்னொரு உடலுக்கு மற்றொரு உடலின் சடங்கு
பொங்கவே செய்யும் நீரற்ற ஊற்றுகளும்
கேட்டறிய முடியா நாசித்துவாரங்களின் மூச்சொலியென
கோடை ஓர் உடல்
அதன் மீது பொழியும் மழைத்துளிகள்
உடல்களெனவே உடைந்து விழும் வேறொர் உடல்
கிரிமினல் ரெக்கார்டுகளின் மொழியில்
சிறைச்சாலைக் குழிகளை நிரப்பும் உடல்கள்
அவை பதிலாக இருக்கும்
நீண்ட மதில் சுவர்களுக்கு வெளியே உடல்கள் கொலையுறுவதுமுண்டு
தடைபட்ட கவிதை குறைப்பிரசவ சவமென அடங்கும்
வெள்ளைப் பிராந்தியங்களின் மீதியிடங்களில் ஒளிந்திருக்கும்
கவிதையும் ஓர் உடல்
ஹிட்லர் வெறுத்த யூத உடல்கள் வெறுத்த அரபு உடல்கள்
கிரிகோர் மெண்டலின் பட்டாணி உடல்கள்
பீகிள் பயணத்தில் கிடைத்த குரங்கு உடல்கள்
ஆஸ்விச் கூடங்களில் நந்திக் கடல்களில்
பிணமென அடுக்கப்பட்ட உடல்களை பதிலாக்கும் விரல்களில்
துப்பாக்கி உடல்கள்
ஆனாலும் ஒற்றை ஓடு போர்த்திய
ஆமை உடல்கள்
நிரம்பவே நிரம்பாத அது ஒரு வெற்றுக் கோப்பை














Saturday, October 13, 2012

நள்ளிரவுக் கோரிக்கை


ஏற்று எனை உன் வீட்டிலெரியும் விளக்கின் சுடரென
அகத்தில் ததும்பும் அன்பின் நீர்நிலைகளில்
கொக்கென உறையும் உன் பார்வைகள்
அன்று நற்சூரியன் சுடாமல் போனதென்ன இப்பனித்துளியை
அன்பே
நான்தான் சூரியன் உன் இரவின் காட்டில் மின்மினியெனத் திரிந்தவன்
பைந்தமிழ் மொழியில் முன்றெழுத்து வார்த்தைகளைத் தேர்ந்தவன்
அன்பே அவை
காதல் அன்பு காமம் மோகம் பசலை மையல்
தொழுகை யும் கூட
விடுதலை வழங்கும் உன் கூந்தல் அசைவுகள்
காற்றில் எழுதும் பாடல்களின் துவக்க வரிகள்
நான் உச்சரித்த சொற்களின் திரிந்த பொருளின் நுட்பம்
உன்னிடத்தில் என் கனவையே அர்ப்பணிக்கிறேன்
அங்கே நீந்தும் கப்பல்களுக்கு மேலே மீன்கள் பறக்கும்
கால்பாவிய நிலத்தின் மீது விண்மீன்கள் மலரென முளைக்கும்
அன்பே அகம் குளிர
இப்போது ஒரு பாடல் பாடு
அதன் அர்த்தம் நம் அன்பாக இருக்கட்டும்
அதன் வார்த்தைகள் மையல் கணத்தில்
ஒருவருக்கொருவர் இட்டுக்கொண்ட பெயர்களாக இருக்கட்டும்
நீளும் இவ்விரவில் விரல்கள் துடிக்க
வார்த்தைகளாக விழும் விசையின் ஒவ்வொரு அழுத்தமும்
அன்பே
இருதயத்தின் துடிப்பென அறியும் கணத்தில்
நீ கன்னியென இருந்தாய்
நான் அந்த கந்தர்வன்
மலர்க்கீரீடம் அணிவிக்க நிலவின் துண்டைக் கொய்தவன்
மரப்பாச்சிகளின் ஆடை திருடி உன் சன்னல்களில் விரித்தவன்
அன்பே
உன் நிதம்பம் முகர்ந்த யூனிகார்ன்
வலப்பக்க காலில் மூட்டின் மேலே மச்சமென ஆனவன்
ஆழ்கடலின் திமிங்கலமாய்த் திரியும் உன் முதுகைத் தடவ
நீந்தும் மீன்கள் ஒவ்வொன்றாய் வழிகேட்டு யுகங்களைக் கடந்தவன்
அன்பே
உனைச் சேர்வேன் சிப்பிகள் சூழ்கொள்ளும் மழைப்போதில்
மின்னல் முறியும் ஒளியில் இடியின் இசையில்
அன்பே
             உனைச் சேர்வேன்
கடந்த வரியின் முதல் வார்த்தைக்கு முன்பிருக்கும் வெற்றிடத்தில்
அப்போதே அறிவாய்
நீ உயிர்கொண்ட நோக்கமும் நான் உடல் கொண்ட நோக்கமும்

Monday, October 8, 2012

சின்னஞ்சிறு கதை 2



கல்லூரியில் படிக்கும் போதிருந்து எனக்கு நெருக்கமான சிநேகிதியான கோகிலாவை நேற்று இரவு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் ஆனால் இன்னும் வலி உண்டாகவில்லை எனவும் எனக்கு அவளுடைய கணவரின் செல்போன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தது.   நான் அப்போதும் அலுவலகத்தில் இருந்தேன். அவளுக்கு இது இரண்டாவது பிரசவம்.   முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததும் சிரித்துக் கொண்டே சொன்னாள்,

"
பேசின மாதிரி நான் ஒழுங்கா பையனைப் பெத்துட்டேன்.    நீ புள்ளையப் பெத்துக் குடு, ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சரலாம்" 

என் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து மிகுந்த மனத்துயரத்தில் இருந்த நேரங்களில் இரவில் வெகு நேரம் வரை என்னை ஆற்றுப் படுத்த பேசுவாள். நான் அந்த குறுஞ்செய்திக்கு இந்த விதமாக பதில் அனுப்பினேன்:   "நாளைக்கு செவ்வாய்க் கிழமை அம்மன் கோவில் செல்வேன். அவளுக்காக வேண்டிக் கொள்வேன்" 

நான் அவ்வாறே செய்தேன்.   "எனது பிரார்த்தனை இன்று உனக்காக மட்டும்தான்". கோவிலில் இருந்து வெளியே வந்ததும் அவளுடைய எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.   இந்த சமயத்தில் அவள் குறுஞ்செய்திகளை பார்க்க முடியாமல் இருந்தால் கூட பிரார்த்தனையை சரியான தருணத்தில் அனுப்பிவிட்ட மகிழ்ச்சி.

எங்கள் அலுவலகத்தில் செல்போன் உபயோகிக்கக் கூடாது.   ஹேண்ட் பேகில் வைத்துக் எடுத்து கொண்டு போய் கழிப்பறையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது வாடிக்கை. 

பதினோரு மணிக்கு ஒரு முறை பார்த்தேன் இன்னும் எந்த தகவலும் வரவில்லை. வேலைப்பளு காரணமாக மதிய நேர உணவையும் தவிர்த்து விட்டேன்.   ஏதோ ஒரு மின்னஞ்சலின் வருகைக்காக காத்திருக்கையில் சட்டென அவளுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்க வேண்டுமென தோன்ற மீண்டும் ஒரு முறை கழிப்பறை சென்று அவள் மற்றும் அவள் கணவருடைய எண்களுக்கு "என்ன குழந்தை?" என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.   10 நிமிடங்கள் வரை எந்தத் தகவலும் இல்லாததால் இருக்கைக்கு திரும்பினேன். 

மாலை.   கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரலாம் என வருகையாளர் அறைக்கு சென்றேன். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே சோடியம் வேப்பரின் ஒளியில் மரம் ஆடிக் கொண்டிருந்தது.   எனக்கென்னவோ அந்த மரம் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஆடுவதாகப் பட்டது. 

வைப்ரேட் மோடில் வைத்திருந்த செல்போன் என் ஜீன்ஸ் பாக்கெட்டில் அதிரவும், இது அவள் குறித்துதான் இருக்கும் என நினைத்துக் கொண்டே எடுத்துப் பார்த்தேன். அவளுடைய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.   மீண்டும் மீண்டும் படித்தாலும் நம்ப முடியாத குறுஞ்செய்தி "9.30 மணிக்கு குழந்தை பிறந்தது.   குழந்தை பிறந்தும் இரத்தப் போக்கு நிற்காததால் 11.30 மணிக்கு கோகிலா இறந்து விட்டாள்".

என்ன செய்வது எனத் தெரியாமல், எவ்வித எண்ணங்களும் எழாமல் நான் அந்த மரத்தைப் பார்த்தேன், எனக்கென்னவோ அது இன்னும் மகிழ்ச்சியாக இருப்பதாகவே தோன்றியதுதான், அந்தக் கணத்தின் உறைவை உடைத்த முதல் எண்ணம் என்பதை, நான் அவளுடைய முதலாம் நினைவு நாளான இன்றும் சரியாக நினைவு கூற முடிகிறது.